அறிந்ததும் அறியாததும்
*குட்டி கதை - அறிந்ததும் அறியாததும்*
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஒரு செல்வந்தர் தனது வீட்டு பால்கனியில் சாய்வு
நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பால்கனியில் ஒரு சிறிய எறும்பு, ஒரு சிறிய ஆனால் அதனை விட பலமடங்கு பெரிதான ஒரு இலையை நகர்த்திக் கொண்டே ஊர்ந்து சென்றது. மெதுவாகவும் மிகவும் கவனமாகவும் சென்றது.
செல்வந்தருக்கு ஒரே ஆச்சர்யம். மேலும் தரையில் ஒரு பிளவைப்பார்த்தவுடன் அது சாமர்த்யமாக இலையை அச்சிறு பிளவின் குறுக்காக வைத்து அதன் மீது ஏறிச் சென்று பின்னர் இலையை இழுத்துச் சென்றது. மேலும் பல தடங்கல்கள் அது தன் திசையைச் சற்றே மாற்றி வெற்றிகரமாக முன்னேறியது.
ஒரு மணி நேரம் விடாமுயற்சி செய்தவாறே பயணம் செய்தது. அவர் வியந்துபோனார். ஒரு சிறு எறும்பின் விடாமுயற்சி சாதுர்யம் மற்றும் புத்திசாலித்தனம் அவரை அசர வைத்தது. அதன் விந்தையை நினைத்து அதிசயித்தார். ஆனால் எறும்பிடம் மனிதனிடம் உள்ள சில குறைபாடுகளும் உள்ளன.
எறும்பு இறுதியில் தனது இருப்பிட இலக்கை அடைந்தது. அது *எறும்புப்புற்று* எனப்படும் ஒரு சிறிய ஆனால், ஆழமான குழி அருகே வந்தது. எறும்பால் அந்த இலையுடன் குழியினுள் செல்ல இயலவில்லை. அது மட்டுமே செல்ல முடிந்தது. தான் ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு இழுத்து வந்த இலையை குழியருகே விட்டுத்தான் செல்ல வேண்டியதாயிற்று. இதற்கு இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாமே!
மனித வாழ்க்கையும் இவ்வாறு தான், மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும்
சிரமப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை ஏற்படுத்திக் கொள்கிறான். அடுக்கு மாடிவீடு, சொகுசான கார், ஆடம்பரமான வாழ்க்கை என பலப்பல இருந்தாலும் இறுதியில் அவன் இறைவனை நோக்கிச் செல்கையில் அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத்தான் செல்ல வேண்டும்.
எறும்பிடமும் பாடம் கற்கலாம். வீணாக சுமைகளைச் சேர்த்து கட்டி இழுக்க வேண்டாம். எதுவும் நம்மோடு வரப்போவதில்லை.
*புரிந்தால் மதி, புரிந்து கொள்ள மறுத்தால் விதி!*
*🌹வாழ்க தமிழ் வளர்க தமிழ்🌹*
Comments
Post a Comment