நமக்கும் இதே நிலைமைதான்... மறந்துவிடாதீர்கள்..!
நமக்கும் இதே நிலைமைதான்... மறந்துவிடாதீர்கள்..!
கிராமத்தில் இருந்த ஒரு குடும்பம் நகரத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தது. அந்த காரின் உள்ளே கணவன், மனைவி, அவர்களின் ஐந்து வயது மகன், வயதான அப்பா! ஆகிய நான்கு பேரும் இருந்தார்கள். கணவன் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரது மனைவி அருகில் உட்கார்ந்து இருந்தாள். அவர்களின் குழந்தை பின்புற சீட்டில் தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறிது தூரம் சென்றதும் காரை ஒரு மெடிக்கல் ஷாப்பில் நிறுத்தினார். அங்கிருந்து கீழே இறங்கி அவன் தந்தையிடம் இருந்து மருந்துசீட்டை வாங்கிக்கொண்டு மெடிக்கலுக்கு சென்றான்.
அவரது தந்தை, சும்மா ஒரு நாலு நாளைக்கு மட்டும் வாங்குனா போதும், டாக்டருங்க அப்படிதான் எழுதி கொடுப்பாங்க என்று கூறினார்.
ஆனால், அவரது மகன், நீங்க சும்மாருங்கப்பா... டாக்டர் சொன்ன மாதிரி எல்லா மருந்து மாத்திரையையும் ஒரு மாசத்திற்கு வாங்கிக்கலாம். நீங்க ஒரு மாசத்திற்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா சரியாயிடும் என்று சொல்லி மருந்துசீட்டை வாங்கிச்சென்று எல்லா மருந்துகளையும் வாங்கி வந்தார்!
அதைப்பார்த்த குழந்தை தன் அப்பாவின் பாசத்தை கவனித்துக் கொண்டு இருந்தான்! அடுத்ததாக காரை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நிறுத்தினார். தன் தந்தையிடம் மகன், என்னென்ன பழங்கள் பிடிக்கும் அப்பா? என்று கேட்டார். அதற்கு அவர், ஏதாவது ஒன்னு கால் கிலோ வாங்கிட்டு வாப்பா... போதும்! எதுக்கு தேவையில்லாத செலவு என்று கூறினார்.
ஆனால், மருமகள், இதையெல்லாமா அவர்கிட்ட கேட்டுட்டு இருப்பீங்க, எல்லாத்துலையும் அரை அரை கிலோ வாங்கிட்டு வாங்க என்றதும் குழந்தை தன் அம்மாவையும் சந்தோஷமாக பார்த்தான்!
இரண்டு கைகளிலும் நிறைய பழங்கள், ஹார்லிக்ஸ் என தாத்தாவுக்காக இவ்வளவு பொருட்களை சந்தோஷமாக வாங்கிவரும் அப்பாவை பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தான் அந்த ஐந்து வயது குழந்தை!
பிறகு சிறிது நேர பயணத்திற்கு பின், காரை ஒரு கட்டிடத்தின் வாசலில் நிறுத்தினார்.
அது ஒரு முதியோர் இல்லம்!
வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கணவன் மனைவி இருவரும் கஷ்டப்பட்டு சுமந்து சென்று உள்ளே வைத்தார்கள். மருந்து எல்லாம் தவறாம சாப்பிடுங்கப்பா... ஏதாவது அவசரம்னா போன் பண்ணுங்க என்றபடி இந்த மாதத்திற்கான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு திரும்பி வந்தனர்.
முதல் நாள் பள்ளியில் விட்டுச்சென்ற குழந்தையைப் போல அந்த முதியவர் தன் மகனையை பார்த்து நின்றார். பேரக் குழந்தை மட்டும் ஏதும் புரியாமல் டாடா காட்டியபடி சென்றான்! பிறகு காரில் அந்த குழந்தை முன் சீட்டில் உட்கார்ந்திருந்தது. அவரது மனைவி பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள்!
ஏக்கத்துடன் அந்த குழந்தை, ஏன்பா தாத்தாவ நம்ம வீட்ல வச்சிக்காம இங்க விட்டுட்டு வர்றோம்? என்று கேட்டது. அதற்கு அவர், தாத்தாவிற்கு வயதாகிவிட்டது இல்லையா, அதான் இங்க விட்டுட்டு வர்றோம்! இங்க இருந்தாதான் அவர் சந்தோஷமா இருப்பாரு... என்று கூறினார்.
உடனே அந்த குழந்தை அப்போ உங்களுக்கும் வயசாயிடுச்சின்னா நான் இங்கதான் உங்களை கொண்டுவந்து விடனுமா...? என்று கேட்டது.
குழந்தையின் கேள்வியில், அதிர்ந்து போனவர் பிரேக்கை அழுத்தினார்.... காதை கிழிக்க வேண்டிய சத்தம் ஏனோ அவர்களுக்கு அவர்களின் நெஞ்சை கிழித்தது....
Comments
Post a Comment