சுவை என்பது நாக்கில் மட்டுமல்ல மனதிலும் இருக்கிறது
*தினம்* *ஒரு* *கதை*
ரெஸ்ட்டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின் அழகில் மயங்கினான் அவன்.
இதயம் துடிக்க, கைகால்கள் படபடக்க.. உணர்ச்சிமயமாக இருந்தவனுக்கு.. பேச்சும் வர வில்லை.
சர்வரை அழைத்து, 'காபிக்கு கொஞ்சம் சர்க்கரை கொண்டுவா' என்று சொல்ல நினைத்தவன், நாக்கு குழறி 'கொஞ்சம் உப்பு கொண்டு வா' என்றான்.
சர்வர் திகைத்தார். வார்த்தை தவறியது மறு விநாடியே அவனுக்குப் புரிந்து விட்டது என்றாலும் அழகியின் எதிரில் தன் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள, 'ஆமா.. உப்புதான் கேட்டேன். கொண்டு வா!'' என்றான் சர்வரிடம்.
அழகிக்கு ஆச்சரியம். காபியில் உப்பு போட்டு சாப்பிடுவதா? விசாரித்தாள்.
அவனோ உடனடி கதை ஒன்றை அவிழ்த்துவிட்டான். ''கடலோர மீனவ கிராமம் ஒன்றில் பிறந்தவன் நான். இப்ப டவுன்ல வசதியா இருந்தாலும் அப்பாவும் அம்மாவும் அந்தக் கிராமத்தை விட்டு வரமாட்டேங்கிறாங்க. அவங்க நினைப்பும் ஊரு நினைப்பும் என்னைவிட்டுப் போயிடக் கூடாதுங்கிறதால காபியில உப்பு போட்டுக்கறேன்!''
அவனது பெற்றோர் பாசமும் ஊர் பற்றுதலும் அவளை ஈர்த்தது. அடுத்தடுத்து அவளே வந்து வலிய சந்தித்ததில் காதல் வளர்ந்து கல்யாணமும் முடிந்தது.
நாற்பது ஆண்டுகால தாம்பத்தியத்துக்குப் பிறகு அவன் இறந்துவிட, அவனது பெட்டியில் ஒரு கடிதத்தைக் கண்டாள் அவள்.
'ஸாரி டார்லிங்! ஒரு பொய் சொல்லிவிட்டேன். நமது முதல் சந்திப்பின்போது காபிக்கு நான் உப்பு கேட்டது என் உளறல். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வாழ்க்கை முழுக்க நான் காபியில் உப்பு சேர்த்துக்கொண்டாலும்.. அன்று சொன்ன பொய் என்னை நெருடுகிறது..!
*'பின் குறிப்பு: 'நீ மட்டும் கிடைப்பதாக இருந்தால் அடுத்த ஜென்மத்திலும் உப்பு காபி சாப்பிட நான் தயார்!'*
பிறிதொரு நாள்.. அவள் காபியில் உப்பு சேர்த்துக்கொண்ட போது, ''உப்பு கரிக்கலையா?'' என்று கேட்டார் ஒருவர்.
''இனிப்பாக இருக்கிறது!'' என்றாள் அவள்.
நீதி: *சுவை* *என்பது* *நாக்கில்* *மட்டுமல்ல* ... *மனதிலும்* *இருக்கிறது* .
Comments
Post a Comment